உன்னால் முடியும் தம்பி - தன்னம்பிக்கை தொடர் -

 

நா முயற்சியில் ஈடுபட்டால் கவலை மறந்து விடும். அப்போது மாறுபட்ட புதிய எண்ணங்கள் மனதில் தலைதூக்கும்; புதிய எண்ணங்கள் வழிகாட்டும். இதில் முக்கியமான காரியம், "மனதை தளர விடக்கூடாது!' என்பது தான். துணிந்தவனின் மனதிற்கு ஆற்றின் ஆழம் முழங்கால் அளவு தான் என்பர். ஆறு மிக ஆழமாக இருந்தாலும் நாம் நீந்திப் போய் விடலாம் என்பது தான் அவர்களது லட்சியமாக இருக்க வேண்டும்.

ஷேக்ஸ்பியர் எழுதுகிறார்: கடலைப் போன்றது தான் வாழ்க்கை. மேடு, பள்ளம் நிறைந்தது. புயல் நெடுநேரம் வீசப் போவதில்லை. இரண்டு மரங்களைக் கீழே தள்ளியவுடன் புயல் தானே நின்று விடும் என்ற எண்ணத்துடன் செயலில் இறங்கினால், நிலைமை மாறும். சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும், துணிவும் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை. வாழ்வில் நல்ல விஷயங்கள் அதிகமா, கெட்ட விஷயங்கள் அதிகமா என்று அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தினர். நம்மால் சமாளிக்க முடியாத கெட்ட சம்பவங்கள் மற்றும் தோல்விகள் எல்லாம் வாழ்வில் குறைவாகத்தான் இருக்கின்றன என்று கண்டுபிடித்தனர்.

பலர், "வாழ்க்கை நம் கையிலா இருக்கிறது? திடீரென கஷ்டங்களும், தோல்வியும், நஷ்டங்களும், சங்கடங்களும் வாழ்வில் தோன்றுகின்றனவே. இவற்றை நீக்குவதும், போக்குவதும் நம் கையிலா இருக்கிறது?' என்று கேட்பார்.

எந்த கஷ்டம் வந்தாலும் சரி, அடுத்து என்ன செய்யலாம் என்று அமைதியாக யோசித்தோமானால் தெளிவு தென்படும், ஒரு யோசனை தோன்றும். அமைதியாய் இருங்கள், பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.

அமெரிக்காவில், என் வழக்கறிஞர், எனக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்தார். அசாதாரண மனிதர் அவர்!

அவர் பள்ளி மாணவனாக இருந்தபோது பள்ளியின் பஸ்சில் கடைசி வரிசை பெஞ்சில் அமர்ந்திருந்தார். எதிர்பாராத விதமாக பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று பஸ்சை மோத அவர் கை, கால் ஊனமுற்றவரானார். அவரால் நடக்க முடியாது; தள்ளுவண்டியில் வைத்துத் தான் தள்ளிக் கொண்டு போவர். விரல்களின் நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் எழுத முடியாது. டைப்பிங் மெஷின் முன் உட்கார்ந்து கொண்டு எழுத்துக்களை அழுத்துவார்.

உடல்குறை பற்றி பேச மாட்டார். எடுக்கிற வழக்குகளில் எல்லாம் ஜெயித்து விடுவார். அவர் தன் குறைபாடுகளைக் கண்டு அழுது புலம்பியதில்லை; பிறரது இரக்கத்தையும் எதிர்பார்க்க மாட்டார். அது தான் வாழ்க்கை. இருப்பதை ஏற்று, மேலே என்ன செய்யலாம் என்று யோசித்தோமானால் வழி பிறக்கும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எனக்கு ரசாயனப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் ஒருவர் காரைக்குடியைச் சேர்ந்தவர். அவருக்கு திக்குவாய் இருந்தது. ஆனால், அவரது திக்கு வாய்ப் பேச்சு எந்த விதத்திலும் அவரது புத்திசாலித்தனத்தையும், தெளிவையும் தடுத்ததில்லை. பல தோல்வியாளர்களது வாழ்க் கையைப் பார்த்தோமானால் எங்கோ அவர்கள் வாழ்க்கை என்ற நூலை தவற விட்டிருப்பது புரியும் அல்லது எங்கோ வாழ்க்கை எனும் நூலை சிக்கலாக்கிக் கொண்டு உதவி செய்ய வந்த மனைவியுடன் கூட வாழ முடியாமல் வாழ்க்கையை ஓட்டுவர்.

மருத்துவர்கள் என்ன கூறுகின்றனர்... "வாழ்வில் சிக்கல்கள் சகஜம், நாம் தான் சிக்கல்களைப் பொறுமையாக உட்கார்ந்து அலசி சிக்கலைப் போக்க முயல வேண்டும்!'

அண்ணாதுரை எழுதுவார்: "நான் மேஜையில் போய் இடித்துக் கொண்டேன்!' என்று சொல்ல மாட்டோம்; "மேஜை இடித்து விட்டது' என்போம்! மேஜைகளுக்கு என்ன கையா, காலா இருக்கிறது நகர்ந்து நம்மை வந்து இடிக்க... என்பார். எல்லாம் நமது மனோபாவக் கோளாறு தான். நாம் பார்க்கும் விதம், காரணம். பயம், பயத்தைத் தான் கொண்டு வரும். இன்றைய அரசியலில் நல்லதைப் பாராட்டுகின்றனரா, இல்லை கெட்டதைத் தோண்டிப் பார்த்து திட்டுகின்றனரா? என்பதை கவனித்தீர்களா? பிறரைத் தாழ்த்துவதன் மூலம் தான் பெரிய மனிதாக ஆகலாம் என நம்பி எதிரியைத் தாழ்த்த முயல்கின்றனர். இது வெற்றி பெறுவதில்லை. நம்மால் முடியும் என்று தன் வேலையை நன்றாக செய்தால், கவனித்தால் இவர்கள் வெற்றி பெறுவர்.

ஏன் இப்படி செய்கின்றனர் என்று கேட்கிறீர்களா? அறிஞர்கள் கூறுகின்றனர்... "எல்லாம் மனோபாவக் கோளாறு தான்! இயற்கையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதது தான்!' என்கின்றனர்.

 

வாழ்வில் தோல்வி ஏற்படுவது சாதாரணம். மனம் தளர்ச்சி அடைவது இயல்பு. அந்தத் தளர்ச்சி அடைந்த காலங்களில் நாம் ஆற, அமர யோசிக்க வேண்டும். அப்போது நமக்குப் புது வழிகள் தென்படும். தோல்வியை சமாளிப்பது எது? சளைக்காத மனம் தான்! தோல்வியை வெற்றிக் கண்டது எது? விடாமுயற்சி தான்!

"
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்!' என்பார் வள்ளுவர். ஆம், தெய்வத்தால் முடியாதது கூட, முயற்சியால் முடியும். சோர்வு இல்லாமல், முயற்சியில் குறைவு இல்லாமல், மீண்டும், மீண்டும் முயற்சிப்பவர்கள் விதியைக்கூட வெற்றி கொள்ள முடியும் என்றும் சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்?

 

(Continue…)