சாமானியனின் புலம்பல்....

 

தொலைந்து போன நாட்களை நினைத்துதான்

சந்தோசப்படுகிறோம்....

மரணித்த மனிதர்களிடம் மட்டுமே ...

வருகிறது மனிதாபிமானம்...

இன்னும் ஒரு நாள் விடியட்டும்...

அதுவும் வெறுமையாய் அடங்கட்டும்....

 

மதங்களின் போர்வை சுற்றிய மனிதர்கள்....

சுய நலத்தை போர்வையாக்கிய அரசியல்வாதிகள்...

காசுக்காக ஓட்டுப்போட  ஒரு கூட்டம்...

கெளவரவத்திற்கா ஓட்டுபோடத ஒரு படித்த கூட்டம்...

புறக்கணிப்பதாய் சொல்லி...ஒதுங்கும் ஒரு கூட்டம்....

இப்படித்தான் நடக்கிறது நமது தேர்தல்

 

கடைசி வீட்டுத் தாத்தாவின்

துருப்பிடித்த சைக்கிள்...

அடுத்த மழைக்குள்ளாவது

கூரை மாற்ற வேண்டும் என்ற ஆசை....

இந்திய வல்லரசு கனவு போல...!

 

உச்சிவெயில்...குண்டும் குழியுமான

என் கிராமத்து தார்ச் சாலை

மந்திரி வருக்கைக்காக

ஏழை வீட்டு மணபெண்ணாய் அலங்கரித்துக் கொள்கிறது......

தெருவோர டீக்கடையில்...

ஒரு குவளை டீ குடித்து

உலக  அரசியல் பேசும் ஊர்ப்பெருசுகள்......

 

பழைய துணிபோட்டு பக்கெட் வாங்கும் அம்மணிகள்...

அம்மணமான் குழந்தைகள் துணி இல்லாமல்...!

சீமான்களின் மீதமான உணவுகள்...

குப்பைத்தொட்டிக்கு போகாமல்...

என்று தான் நேராய் ஏழைகளின் வயிற்றுக்குப் போகுமோ...?

ஆடம்பராமாய் ஒரு கூட்டமும்...

அடுத்தவேளை சோறில்லாமல் ஒரு கூட்டமும்...

இப்படித்தான் சமத்துவம் சமாதியாயிருக்கிறது!

 

எல்லா முரண்பாடுகளுடன் என் மூளை மட்டும்

ஏன்..ஒத்துப்போக மறுக்கிறது....

புரட்சியாய் என்னுள் உதிக்கும் எண்ணங்கள் எல்லம்....

பூமியை அடைவதற்கு முன்

அணையும் விண்வெளி கற்கள் போல...

செயலாவதற்கு முன் அழிகிறது...

 

கற்ற கல்வியும்...படித்த புத்தங்கங்களும்...

மக்களை விழிப்புணர்வு கொள்ள முயன்று முயன்று...

கடைசியில்...என்னை தனிமைப்படுத்துகின்றன....

மனிதர்களின் கோபங்களிலேயே...

மனித நேயம் செத்துக் கொண்டுஇருக்கிறது...

 

 

நல்ல வீணைகள் எல்லாம்...

இன்று புழுதியில்தான் கிடக்கின்றன...

சுடர்மிகு அறிவுகள் எல்லாம்

இன்று  முட்டாள்களின் கூட்டத்தின் நடுவே...ஊமைகளாய்....!

 

- S. தேவா

 

Visit ....  www.madukkur.com