|
விமர்சனம் : விண்ணைத்
தாண்டி வருவாயா
உனக்கு சினிமா எடுப்பது லட்சியம் எனக்கு சினிமா பார்ப்பதே பாவம்...
நீ இந்து பையன்... நான் கிருஸ்துவ பெண்
என்றெல்லாம் த்ரிஷா ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் அத்தனைக்கும் சிம்புவின் பதில், ஐ லவ் யூ என்பதாக இருக்கிறது! அந்தக் காதல் த்ரிஷாவுக்கும் தொற்றிக் கொள்கிறது. இருவர் காதலும் என்னவானது என்பதுதான் விண்ணைத்தாண்டி வருவாயா சொல்லும் கதை!
அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பாமல் துல்லியமாக நூல் பிடித்ததுபோல ஒரு காதல் கதையைச் சொல்லியிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். துணைக் கதைகளோ உதிரி இழைகளோ எதுவும் இல்லாத சுத்தமான காதல் கதை. காதலின் சுகமும் பிரிவின் வலியும் நிதானமாகச் சொல்லப்படுகின்றன. சிம்பு தன் காதலை வளர்த்தெடுக்கும் விதமும் த்ரிஷா அதற்குச் சாதகமாக எதிர்வினையாற்றுவதற்கான சந்தர்ப்பங்களும் சுவாரஸ்யம்!
நீ என்னை ஃபாலோ செய்கிறாயா என்று த்ரிஷா கேட்கும் இடம், தனக்கு ஏன் காதல் வரவில்லை என்பதற்கு த்ரிஷா சொல்லும் மூன்று காரணங்கள், ரயிலில் நடக்கும் காதல் நாடகம் என பல இடங்களில் சிம்பு த்ரிஷா கெமிஸ்ட்ரி டிஸ்டிங்ஷன் வாங்குகிறது.
‘உன் கண்ணாலேயே என்னை யாரும் பார்க்கலை போல இருக்கு’ என்பது போன்ற வசனங்களில் கௌதம் மேனனின் பேனாவில் காதல் வழிகிறது.
“எங்கிட்ட அப்படியென்ன உனக்கு பிடிச்சது?” என எப்போதோ கேட்ட த்ரிஷாவின் கேள்விக்கு அமெரிக்க எபிசோடில் கிடைக்கும் பதில் டைரக்டர் கெளதம்மேனனின் டச்.
சிம்பு பிராண்ட் எதுவும் இல்லாத சிம்பு படம். ஸ்டைல் இல்லை, பஞ்ச் வசனம் இல்லை. காதலில் உருகும் இளைஞனின் வேடத்தைக் கச்சிதமாகச் சித்தரிக்கிறார். காதலின் உற்சாகம், ஏமாற்றத்தால் வரும் ஆத்திரம், பிரிவின் வலி எல்லாமே அளவெடுத்தது போல இருக்கிறது. இப்படி டைரக்டரை நம்பி தன்னை ஒப்படைக்க சிம்பு முன்வந்தால் சிம்புவின் சினிமா கேரியர் ஜிவ்வென்று பறக்கும்.
த்ரிஷாவுக்கு இது முக்கியமான படம். இயல்பான அழகைத் தன்னைச் சுற்றிலும் படரவிட்டபடி அவர் நடந்து செல்லும் காட்சிகள், குறும்பான பார்வையிலும் சின்னச் சின்ன சிரிப்பிலும் நுட்பமான முக பாவ மாற்றங்களிலும் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் ஆகியவை ரசிக்கும்படி உள்ளன, ரயிலில் சிம்புவின் அதிரடி முயற்சிகளை எதிர்கொள்ளும் விதம், இது சரியாக வராது என்று அழுத்தமாகச் சொல்லும் இடம், கிளைமாக்ஸில் சிம்பு பேசப் பேச உருகும் காட்சி என்று பல இடங்களில் நன்றாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் புடவைக்கடை மாடல்போல இவர் வருவது வித்தியாசமான அழகாகக் காட்சியளிக்கிறது. துளிக்கூட உடலைக் காட்டாமல் படம் முழுவதும் வசீகரிக்கிறார். த்ரிஷாவுக்கான நளினி ஸ்ரீராமின் ஆடை வடிவமைப்பு அற்புதம்.
பாடல்களால் நம்மைக் கட்டிப்போடுகிறார் இசைப்புயல். பாடல்களில் இருக்கும் மேற்கத்தியத்தனம் படத்தின் நிலையையே உயர்த்திச் செல்கிறது.
மனோஜ் அமெரிக்காவையும் கேரளாவையும் சென்னையின் சில இடங்களையும் அழகாகப் படம் பிடித்திருப்பதுடன் த்ரிஷாவை மிக அழகாகக் காட்டியிருக்கிறார்.
படத்தில் பல விஷயங்கள் சிறப்பாக இருந்தாலும் படத்தின் நீளம் கௌதம் மேனனின் எல்லாப் படங்களையும் போல இந்தப் படத்திலும் அலுப்பூட்டுகிறது.
இனி இது சரிப்பட்டுவராது என்று த்ரிஷா தீர்மானமாக முடிவு செய்து பிரிந்து செல்லும் காட்சிக்குப் பிறகு படம் சரிய ஆரம்பிக்கிறது. த்ரிஷா அப்படிப்பட்ட முடிவை எடுப்பதற்கான காரணம் வலுவாக இல்லை. இந்தப் பிரிவின் சோக கீதம் நீண்டுகொண்டேபோய் கிளைமாக்ஸில் ஒரு திருப்பத்துடன் கனமாக முடிவடைகிறது. ஆனால் பிரிவுக்கான காரணம் வலுவாக இல்லாததால் இந்தச் சோகம் நம் மனதைத் தொட மறுக்கிறது.
அதேபோல இரண்டாம் பாதியில் படம் மிக மெதுவாக நகர்கிறது. வெவ்வேறு இடங்களில் த்ரிஷாவும் சிம்புவும் சந்தித்துப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். காதலின் வெவ்வேறு உணர்வு நிலைகள் பற்றிச் சலிக்கச் சலிக்கப் பக்கம் பக்கமாகப் பேசிக்கொண்டே போகிறார் மேனன். காதலை மென் தென்றலாக உணரவைப்பதற்காக ரொம்பவே மெனக்கெடுகிறார். ஆனால் திரும்பத் திரும்ப ஒரே விதமான காட்சிகள் வந்து அலுப்பூட்டுகின்றன.
கொஞ்சம் கத்தரி போட்டு, காட்சிகளைக் கட்டியிருந்தால் நிஜமாகவே விண்ணை தாண்டி வந்திருக்கும்!
|